காதலும், கவிதையும் பல நேரங்களில் அறியாமையாக தோன்றலாம் . அறியாமைகள் பல நேரங்களில் அழகு கூட்டுபவை. குழந்தையின் வெள்ளந்தியான அறியாமையினூடாக எழும் கேள்வி அழகானது இல்லையா?
இதேபோல்தான் காதலி காதலனிடமும், காதலன் காதலியிடமும் சில, பல நேரங்களில் “உண்மையாக என்னை பிடிச்சிருக்கா?” என்று அறிந்தும் அறியாமல் கேட்கும்பொழுது அநத பொழுதில் நிகழும் அறியாமையில் அழகைத்தவிர வேறேது மிஞ்சும். ஏங்கவும், உள்ளத்தை தாங்கவும் காதலும், கவிதைக்கு மட்டுமே சாத்தியம்.
அவிழ்க்க முடியாத புதிர் போன்று சொல்ல முடியாத சொற்கள், சொல்ல தவிர்க்க முடியாத சொற்கள் இரண்டும் கலந்தே காதலும், கவிதையும் வாழ்கிறது. கடிதங்களில் முற்று பெறாதவைகளாகி திசை தெரியாமல் நிற்கும் சொற்கள் கவிதைகளில் தவறி விழுந்துவிடுகின்றன உள்ளத்தில்.........கவிகள் சொல்ல முடியா சொற்களை சில காதல் தருணங்கள் கவிதைகளாக்கிவிடுகின்றன வாழ்க்கையில்
அமிழ்ந்து விடும் சொற்களை
உமிழ்ந்துவிடும் துணிவில்லை
சொற்கள் தொண்டையில் சிக்கிய
மீன் முள்ளாய் நெருடினாலும்
மீன்விழிகளை பார்க்கும்பொழுது
முள்ளோடு தொண்டைக்குழி வழியாக
அந்த மீன் இதயக்குழாய்களில் நீந்தாதா
என்ற ஏக்கம் இல்லாமல் இல்லை
பிரிவிக்கு பரிவு கிடையாது. நாம் உணரவிரும்பா அன்பின் ஆழத்தையும், பறிக்கப்பட்ட உள்ளத்தையும், தொலைக்கப்பட்ட தருணத்தையும் மெல்லிய புன்சிரிப்பையும், ஓங்கி சிரித்த பொழுதுகளையும் நினைவுப்படுத்திக் கொண்ட இருக்கும்.
எப்படி சொல்வேன் அவளிடம்
இவ்விடமும் அதே நிலை என்பதனை
ரோஜா, கைக்குட்டை, புத்தகம்
என அனைத்தையும் சேகரித்த நீ
என் மணித்துளிகளையும் சேர்த்தே
ஏன் சேகரித்திருக்கூடாது?
தோழிகள் எப்படித்தான் அழகாகிறார்களோ? தெரியாது. கொடுத்த பொழுதுகளை சுவைகூட்டி, பல மணித்துளிகளை திருடிவிட்டு தருகிறார்கள், நாம் கொடுத்த பொழுதுகளில் எடை குறைவதில்லை, குறைந்த பொழுதுகளை கண்டுபிடித்துவிட்டாலும், விடை தேட உள்ளம் இடம் தருவதில்லை, திருடியது தோழிகள்தானே என்று விட்டுவிடுகிறது.
காதலி இருப்பதனாலேயே தோழிகளாகிறவர்கள் தோழிகளாகவே இருந்து விடுகின்றனர், காதலி என்ற ஒருத்தி ஒருத்தியாகவே இருந்துவிட்டு போகட்டும் என்று வரம் தந்துவிட்டு.